Sunday, 26 June 2011

மண்ணுக்குள் வாழும் சரித்திரம்...

எத்தனை காட்சிகள் காண்கிறேன் ஒரு நாளிலே ..
எத்தனை கவலைகள் உணர்கிறேன் பலர் மனதிலே..
 உணர்வினில் உறைந்தது சிறு சலனம்
சிலர் வாழ்வினில் தான் எத்தனை அவலம்!!

போட்டிகள் நிறைந்ததா வாழ்க்கை??
போராட்டங்கள் நிறைந்ததா வாழ்க்கை??
சலிப்புகள் நிறைந்ததா வாழ்க்கை??
இல்லை சகிக்கதக்கதோ இந்த வாழ்க்கை??

இந்தியர் அனைவரும் உடன் பிறந்தோர்
என்னும் மொழியினை தினமும் உறுதிகூறி
என் உடன்பிறந்தோர் பலர் கண்ணில் நீர்மல்கி நிற்க
கைகட்டி கைவிரித்து அவரை கடந்தது என்னவோ??

காலத்தின் பாதைதனில் வழிதவறி போகின்றார்;
சகபயணியாம் என்னிடம் வழிகேட்டு நிற்க;
விழிபிதுங்கிய நிலையில்,
நான் சேரும் இடம் இன்னும் வரவில்லை என்றேனோ?
எங்கேதான் வழி நானும் அறியவில்லை என்றேனோ?
என்மொழிகேட்டு சலிப்புடன் சென்றாரோ
இல்லை என்னை கடிந்தேதான் கடந்தாரோ?

கதிரவனை காணாத விதையாய்
                   மண்ணுக்குள் நான்!!
என்னிடம் காயும் கனியும் வேண்டினால்
                    அளிப்பது எவ்வாறு??
அள்ளிகொடுக்க முடியாது போனாலும்,

தோழியரே!!
        உங்கள் கண்ணீரின் பாரத்தை என்மேல் பொழியுங்கள்
        அதை கண்டபின்னும் மொழியாமல்,
                    மண்ணுக்குள் மாண்டிட மாட்டேன்
         உன் துயர் துடைக்க துணிவு கொண்டே
       என் செவ்வானமாம் மண்வானத்தை முட்டிக்கொண்டு
                   நீலவானம் காண்பேன்!!

என் எழுச்சியில் எனக்கு மகிழ்ச்சி இல்லை!
உன்னை நிற்கவைப்பதில் என்மனம் நிறைந்திருப்பேன்..

இது மண்ணுக்குள் வாழும் புலம்பல் அல்ல!!
ஆங்கே
              புதைந்து கிடக்கும்
                      என் எதிர்கால சரித்திரம்!!!